வங்காளதேச தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று தேர்வு செய்து அறிவிக்கப்படுகிறது. ஷேவாக், ஹர்பஜன்சிங், யுவராஜ்சிங், ஜாகீர்கான் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி இன்று தேர்வு
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) 7–ந் தேதி முதல் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் ஒரு டெஸ்ட் 3 ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகிறது. டெஸ்ட் போட்டி பாதுல்லாவில் ஜூன் 10–ந் தேதி முதல் 14–ந் தேதி வரையும், ஒருநாள் போட்டிகள் மிர்புரில் ஜூன் 18, 21, 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
வங்காளதேச தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி தேர்வு மும்பையில் இன்று (புதன்கிழமை) பகல் 12 மணிக்கு நடக்கிறது. சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வு குழுவினர் கூடி ஆலோசித்து அணியை தேர்வு செய்கிறார்கள்.
விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா
கடந்த டிசம்பரில் நடந்த ஆஸ்திரேலிய பயணத்தின் போது கேப்டன் டோனி திடீரென டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட்கோலி நியமிக்கப்பட்டார். உலக கோப்பை மற்றும் ஐ.பி.எல். தொடரில் தொடர்ந்து விளையாடியதால் டோனி, விராட்கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் ஓய்வு கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது. டெஸ்ட் போட்டியில் விராட்கோலிக்கு ஓய்வு அளிக்கப்படமாட்டாது என்றும் ஒருநாள் போட்டி தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.
டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக விருத்திமான் சஹா தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. டோனிக்கு ஓய்வு அளிக்கப்படாவிட்டால் அவர் ஒருநாள் போட்டி அணிக்கு கேப்டனாக இருப்பார். ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்கள் லோகேஷ் ராகுல், ரஹானே, தவால் குல்கர்னி ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.
சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு?
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான ஷேவாக், யுவராஜ்சிங், ஜாகீர்கான், ஹர்பஜன்சிங் ஆகியோர் வங்காளதேச தொடருக்கு தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு பிரிவு உபசார போட்டியாக இந்த தொடரில் விளையாட வாய்ப்பு அளிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. 2011–ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் ஜொலித்த இவர்கள் அதன் பிறகு அணியில் இருந்து தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டார்கள். 4 பேரும் ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வருகிறார்கள். ஷேவாக், யுவராஜ்சிங் சொதப்பினாலும், ஜாகீர்கான், ஹர்பஜன்சிங் சிறப்பாக செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.